உள்ளூர் செய்திகள்
சோழவந்தானில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.
சோழவந்தான்
பழமையும் பெருமையும் வாய்ந்த உலக புகழ்பெற்ற சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஜூன் 6-ந்தேதி தொடங்கி தொடர்ந்து 17நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.
சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்களும், வெளியூரில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான பக்தர்களும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக உருவ பொம்மைகளை நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
தற்போது சோழவந்தான் அருகில் உள்ள முள்ளி பள்ளத்தில் நேர்த்திக்கடன் செலுத்திடும் உருவ பொம்மைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து உருவ பொம்மைகள் தயாரிக்கும் பிச்சை (வயது 68)என்பவர் கூறியதாவது:-
உருவ பொம்மைகள் தயாரிக்க முதலில் கரம்பை அல்லது வண்டல் மண் எடுத்து அதனை சலித்து அத்துடன் நீர்சேர்த்து வைக்கோல் சாந்து அல்லது உமி சேர்த்து உருவ பொம்மைகள் அச்சில் வார்க்கப்படம். அதன்பின் பொம்மைகளை எடுத்து 4 அல்லது 5 நாட்கள் நிழல் காய்ச்சலாக சூரிய ஒளிபடாதவாறு வைத்து, அதன்பின் 2 நாட்கள் வெயில் காய்ச்சலில் சூரிய ஒளி படும்படியாக வைக்கப்படும்.
இவ்வாறு கடைபிடிப்பதால் பொம்மைகளில் விரிசல் ஏற்படாது. இதன்பின் சமதளத்தில் 400க்கும் மேற்பட்ட பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு உறி மட்டைகள் அல்லது தேங்காய் மட்டைகள் வைத்து குறைந்தபட்சம் 4 மணி நேரம் வேக வைக்கப்படும்.
இந்த பொம்மைகள் சுட்டபின் கலர் வண்ணங்கள் தீட்டப்படும். எங்கள் ஊரில் உள்ள எங்கள் குடும்பம் உட்பட இன்னும் 2 குடும்பங்கள் வாழையடி வாழையாக இந்த தொழிலை மனநிறைவோடு செய்து வருகிறோம். ஏற்கனவே 3 மாதம் விரதம் இருந்தவர்களுடன் நேர்த்திக்கடன் விரதம் இருப்பவர்களும் இருக்க தொடங்குவார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர் முருகானந்தம் (72) என்பவர் கூறுகையில், குடும்பத்தில் ஏற்படும் இழப்புகளை தடுக்கவும் வறுமை ஒற்றுமையின்மை இழந்த சந்தேஷம், உடல் சுகவீனங்கள் நிவர்த்தியாக இந்த நேர்த்திக் கடன் செலுத்துவது ஆன்மிக நம்பிக்கை என்றார்.