உள்ளூர் செய்திகள்
திருப்பூர் காதர் பேட்டையில் மொத்த, சில்லரை விற்பனை கடைகள் அடைப்பு - வெளிமாவட்ட வியாபாரிகள் ஏமாற்றம்
நூல் விலை அபரிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது
திருப்பூர்:
கடந்த சில மாதங்களாக நூல் விலை அபரிதமாக உயர்ந்து வரக்கூடிய சூழ்நிலையில் இம்மாதம் கிலோ 40 ரூபாய் வரை விலை உயர்ந்து 470 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பின்னலாடை தொழில் மிகவும் பாதிக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு உடனடியாக பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும் , பருத்தி மற்றும் நூல் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் தொழில் அமைப்புகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக திருப்பூர் காதர் பேட்டை பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மொத்த மற்றும் சில்லறை ஜவுளி விற்பனை கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.