உள்ளூர் செய்திகள்
குழந்தைகளுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த மணிமேகலை.

மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி எனது கணவரை மீட்டு தாருங்கள்-கல்குவாரி விபத்தில் சிக்கிய டிரைவரின் மனைவி கண்ணீர்

Published On 2022-05-17 09:43 GMT   |   Update On 2022-05-17 09:43 GMT
மீட்பு பணிகளை தீவிரப்படுத்தி எனது கணவரை மீட்டு தாருங்கள் என கல்குவாரி விபத்தில் சிக்கிய டிரைவரின் மனைவி கண்ணீர் மல்க கூறினார்.
நெல்லை:

கல்குவாரி விபத்தில் சிக்கிய தச்சநல்லூர் ஊருடையார் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இன்னும் மீட்கப்படவில்லை. விபத்தில் சிக்கி 3 நாட்கள் ஆகியும் அவரது கதி என்ன ஆனது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை தனது 2 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இன்று நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு அளித்தார்.

பின்னர் அவர் கூறுகையில், விபத்து நடந்த கல்குவாரியில் எனது கணவர் ராஜேந்திரன் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது மகன் முகேஷ் தந்தையின் நிலைமையை எண்ணி அழுதவாறே பிளஸ்-1 தேர்வு எழுத சென்றுள்ளார்.

சனிக்கிழமை வேலைக்கு சென்ற எனது கணவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மீட்பு பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. எனவே கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தி எனது கணவரை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
Tags:    

Similar News