உள்ளூர் செய்திகள்
கைது

ரெயிலில் கடத்தி வரப்பட்ட 4½ கிலோ கஞ்சா பறிமுதல்- வாலிபர் கைது

Published On 2022-05-12 09:51 GMT   |   Update On 2022-05-12 09:51 GMT
சென்னை சென்ட்ரலுக்கு ரெயிலில் கடத்தி வரப்பட்ட 4½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கொல்கத்தா வாலிபரை கைது செய்தனர்.
சென்னை:

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் முதன்மை கோட்ட பாதுகாப்பு கமிஷனர் செந்தில் குமரேசன் அறிவுறுத்தலின் படி, இன்ஸ்பெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படை புலனாய்வு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தன்பாத்தில் இருந்து ஆலப்புழாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 4வது நடைமேடையில் வந்து நின்றது. அந்த ரெயிலில் சோதனையிட்ட போலீசார் டி3 பெட்டியில் இருந்து சந்தேகப்படும்படியாக இறங்கிய வாலிபரை பார்த்தனர்.

அவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் 4½  கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் கேரள மாநிலம், கொல்லத்தை சேர்ந்த ஜிஜின் சன்னி(வயது 24) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார், போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.

அதே போல், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், தடியாட்டபரம்பா போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவர் மங்களூரில் இருந்து சென்னை வரும் வெஸ்ட் கோர்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருவது தொடர்பாக சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புலனாய்வு துறையினர் அந்த ரெயில் பெரம்பூர் ரெயில் நிலையம் வந்த போது ரெயிலை சோதனையிட்டனர்.

அப்போது தேடப்பட்டு வந்த நபர் முன்பதிவில்லாத பெட்டியில் அதே ரெயிலில் பயணம் செய்து வந்ததையடுத்து போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் தடியாட்டபரம்பா போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டு நேற்று அதிகாலை அவர்களிடம் குற்றவாளி ஒப்படைக்கப்பட்டார்.


Tags:    

Similar News