உள்ளூர் செய்திகள்
கைது

மதுரவாயலில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

Published On 2022-05-12 06:27 GMT   |   Update On 2022-05-12 06:27 GMT
மதுரவாயலில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர், இளம்பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

மதுரவாயல் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக அண்ணா நகர் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கோபாலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், அவ்வழியே மோட்டார் சைக்கிளில் டீ விற்பனை செய்து வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர். அவனிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

விசாரணையில் டீ விற்பது போல கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (29) என்பது தெரியவந்தது. மேலும் போரூரில் பிரியா (26) என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாகவும் போலீசிடம் அவன் கூறினான்.

இதைதொடர்ந்து போரூரில் உள்ள பிரியா வீட்டிற்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 7 கிலோ கஞ்சா, 2 எடை எந்திரங்கள், ஒரு அரிவாள், 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் சோதனை செய்துகொண்டு இருந்தபோது பிரியா வீட்டிற்கு கஞ்சா வாங்க வந்த தனியார் கல்லூரி மாணவர் பாபு (20) என்பவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பிரியாவிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் இருந்து பெண் ஒருவர் மூலம் கஞ்சா வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News