உள்ளூர் செய்திகள்
கொள்ளை

திண்டிவனத்தில் ஓட்டல் ஊழியர் வீட்டில் துணிகர கொள்ளை முயற்சி

Published On 2022-05-11 10:14 GMT   |   Update On 2022-05-11 10:14 GMT
திண்டிவனம் பகுதியில் இரவு நேர போலீஸ் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திண்டிவனம்:

திண்டிவனத்தில் உள்ள பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 10 நாட்களாக ஆறுமுகத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்தனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர் நள்ளிரவில் ஆறுமுகத்தின் வீட்டிற்கு வந்தார்.

அப்போது இடி, மின்னலுடன் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தது. அப்போது அந்த மர்மநபர் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றார். அப்போது முன்பக்க கதவை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் திருட கதவை உடைப்பது கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை பிடிக்க முயன்றனர்.

இதை அறிந்த அந்த மர்ம நபர் திண்டிவனம் கிடங்கல் ஏரிக்கரை வழியாக தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து திருட முயற்சித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் திண்டிவனம் பகுதியில் கொலை கொள்ளை பீதியில் வாழ்ந்து வரும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் இரவு நேர போலீஸ் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News