ஏற்காட்டில் இன்று அதிகாலை போட்டோ ஸ்டூடியோவில் தீ விபத்து
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் ஏற்காட்டில் டவுன் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். நேற்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் போட்டோ ஸ்டூடியோ திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஏற்காடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். ஆனால் போட்டோ ஸ்டூடியோவில் இருந்த கேமிரா மற்றும் அனைத்து பொருட்களும் எரிந்து விட்டது.
தீ விபத்தை அறிந்த ஏற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இந்த தீ விபத்தால் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது தெரியவந்தது. மேலும் மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.