உள்ளூர் செய்திகள்
மதுரையில் பிளஸ்-1 தேர்வு இன்று தொடங்கியது. இதில் 37,442 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
மதுரை
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இந்த நிலையில் பிளஸ்-1 பள்ளி மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 115 மையங்களில் 323 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 18 ஆயிரத்து 728 பேரும் மாணவிகள் 18 ஆயிரத்து 714 பேரும் மொத்தம் 37 ஆயிரத்து 442 பேர் இந்த தேர்வை எழுதினர்.
முதல் நாளான இன்று மொழிப்பாடம் (தமிழ்) தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவ-மாணவிகள் சரியாக காலை 9.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டனர். 10 மணிக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு 10. 15 மணிக்கு விடை எழுத அனுமதிக்கப்பட்டது. பகல் 1 .15 வரை தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள்களை தேர்வு கண்காணிப்பாளரிடம் வழங்கினர்.
பின்னர் அவர்கள் அனைவரும் தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்தனர். மொழிப் பாடமான தமிழ்தேர்வு மிக எளிமையாக இருந்ததாக மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பிளஸ்- 1 தேர்வை யொட்டி அனைத்து மையங்களிலும் வெளிநபர்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.