உள்ளூர் செய்திகள்
பாளையில் துணிகரம் ஓய்வு பெற்ற சிறை அதிகாரி வீட்டில் நகை திருட்டு-போலீசார் விசாரணை
பாளை குலவணிகர்புரம் பகுதியில் ஓய்வு பெற்ற சிறை அதிகாரி வீட்டில் நகை திருட்டு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை குலவணிகர்புரம் மாசிலாமணி நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது62). இவர் பாளை மத்திய சிறையில் துணை ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி அன்னபூரணி. இவர்களது மகன் ஆனந்த் (30). பெங்களூர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த 3-ந்தேதி ரவீந்திரன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் ஆனந்த் இன்று அதிகாலை வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
திருமண நிகழ்ச்சிக்கு சென்றதால் பெரிய நகைகளை அவர்கள் எடுத்து சென்றதாக தெரிகிறது. இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது விசா ரணையில் தெரிய வந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்டது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.