உள்ளூர் செய்திகள்
குமாரபாளையத்தில் கட்டுமான பணியில் தொழிலாளி காயம்
குமாரபாளையத்தில் கட்டுமான பணியில் தொழிலாளி காயம் வீட்டு உரிமையாளர் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் செய்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே கத்தேரி சாமியம்பாளையம் பகுதியில் வசிப்பவர் கருணாகரன்(வயது 53). செண்ட்ரிங் தொழிலாளி.
கடந்த 28-ந்தேதி இவர் முத்து என்ற மேஸ்திரி அழைத்ததின் பேரில், ஆனங்கூர் ரோடு, ஒட்டன்கோவில் பகுதி எம்.எஸ்.வி. மகாலுக்கு பின்புறம் செங்கோடன்(52) என்பவரின் வீட்டிற்கு கீழ்நிலை தண்ணீர் தொட்டி சென்ட்ரிங் வேலை செய்ய சென்றார்.
அவருடன் அஜித் (22) என்பவரும் வேலை செய்தார். அருகில் ராஜேஷ்குமார் என்பவர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தரை தளத்தை மண் கொட்டி சமன் செய்து கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக மண்ணை தண்ணீர் தொட்டி அருகே வேலை செய்து கொண்டிருந்த கருணாகரன் மீது கொட்டியதில் பலத்த காயமடைந்தார். அஜித் லேசான காயம் அடைந்தார். அவர்கள் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக கருணாகரனை வேலைக்கு அழைத்து சென்ற முத்து, வீட்டின் உரிமையாளர் செங்கோடன், ஜே.சி.பி. ஓட்டுனர் ராஜேஷ்குமார் ஆகிய 3 பேர் மீது குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.