உள்ளூர் செய்திகள்
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடந்த ஆண்டு ஒரு கோடிக்கு ஆன்லைன் பண பரிவர்த்தனை
கடந்த நிதியாண்டில், (2020-21) மொத்தம் நடந்த 11 கோடி ரூபாய் வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
அவினாசி:
அரசின் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் உள்ளிட்ட ஏல வர்த்தக மையங்களில் ஆன்லைன் பண பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படுகிறது.
அதன்படி விவசாயிகள் விற்கும் விளைபொருட்களுக்கான விலையை, நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தும் வகையில், விற்பனைக்கூட நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்பூர்சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடத்தப்படுகிறது. சீசன் சமயத்தில், வாரந்தோறும் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் நிலக்கடலையை ஏல விற்பனைக்கு எடுத்து வருவர்.
விவசாயிகள் மத்தியில் 'ஆன்லைன்' பண பரிவர்த்தனை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக ''கடந்த நிதியாண்டில், (2020-21) மொத்தம் நடந்த 11 கோடி ரூபாய் வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் 260 விவசாயிகள் பயன் பெற்றனர் என விற்பனைக்கூட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.நடப்பாண்டு ஏலம் வரும் செப்டம்பர் முதல் வாரம் தொடங்க உள்ள நிலையில், அனைத்து விவசாயிகளையும், ஆன்லைன் பண பரிவர்த்தனைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் விற்பனைக்கூட சங்க நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விற்பனைக்கூட சங்க சேமிப்பு கிடங்கின் சுவற்றில் விளக்கப்படமும் வரையப்பட்டுள்ளது.