தஞ்சை அருகே மாட்டுக்கு புல் அறுக்க சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பலி
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா கீழவன்னிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40) விவசாயி. இவர் தான் வளர்க்கும் மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக அருகே உள்ள அருமலை கிராமத்துக்கு சாக்குப் பையுடன் நடந்து சென்றார்.
பின்னர் அங்கு உள்ள தென்னந்தோப்பில் புல் அறுப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது தோப்பில் கீழே அறுந்து கிடந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கனகராஜ் இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பாப்பாநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கனகராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கனகராஜ் மனைவி சரண்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.