உள்ளூர் செய்திகள்
படிப்பை பாதியில் நிறுத்தும்: கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- தங்கமணி
கல்லூரிகளில் படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே நின்று விடும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது, கல்லூரிகளில் படிப்பை தொடர முடியாமல் இடையிலேயே நின்று விடும் மாணவ மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் உடனே சான்றிதழ் கொடுப்பது இல்லை. முழு கட்டணத்தை செலுத்தினால் தான் சான்றிதழ் தருவதாக கூறுகிறார்கள்.
பல மாணவிகள் படிப்பை தொடர முடியாமல் திருமணம் செய்யும் சூழ்நிலையில் அவர்களுக்கும் பணம் செலுத்தினால் தான் சான்றிதழ் தருவதாக கூறுகிறார்கள்.
எனவே படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ மாணவிகளுக்கு படிப்பு சான்றிதழ் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் பொன்முடி பதில் அளிக்கையில், தனியார் கல்லூரிகளில் பணம் கட்டிதான் மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். இடையில் நிற்கும் மாணவர்கள் பாதிக்கு பாதியாவது பணம் கட்டி சான்றிதழ் வாங்கி செல்ல வேண்டும்.
இடையில் நிற்கும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் கொடுக்க மறுத்து அது அரசின் கவனத்திற்கு வந்தால் சான்றிதழ் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது பற்றி தனியார் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படும். என்றார்