உள்ளூர் செய்திகள்
மாவட்ட நிர்வாகம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி மாதிரி தேர்வுக்கு அரசு அதிகாரிகள் நியமனம்
மாவட்ட நிர்வாகம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி மாதிரி தேர்வுக்கு அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளார்கள் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) தொகுதி - 2 மற்றும் 2 ஏ முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு சேலம் மாவட்டத்தில் இருந்து இளநிலை, முதுநிலை உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 2 நாட்கள் மாதிரி தேர்வுகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக 2 இலவச மாதிரி தேர்வுகள் முறையே வருகிற 8-ந்தேதி மற்றும் 15-ந்தேதி ஆகிய தினங்களில் சேலம் தியாகராஜார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளன. இந்த தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
விருப்பமுள்ள நபர்கள் தேர்வு நடைபெறும் வளாகத்தில் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் தேர்விற்கு விண்ணப்பித்த நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளவேண்டும். காலை 9 மணிக்கு பின்னர் வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
நியமனம் இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு இன்னும் சிறிது நாட்களே இருப்பதால் தற்போது 2 நாட்கள் மாதிரி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. தேர்வை சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் முன்னின்று நடத்துகிறார்கள். இதற்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உதாரணத்திற்கு 50 பேர் எழுதுகிறார்கள் என்றால், அவர்களை கண்காணிப்பதற்கு ஒரு அரசு அதிகாரி வீதம் நியமிக்கப்படுவார்கள். மதிப்பெண்கள் எவ்வளவு எடுத்துள்ளார்கள் என்ற விபரம் பின்பு அவர்களுக்கு தெரிவிக்கப்படும், என்றார்.