உள்ளூர் செய்திகள்
பல்லடம் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடத்தை நிரப்ப வேண்டும் - வக்கீல்கள் கோரிக்கை
பல்லடம், உரிமையியல் நீதிமன்றம் நீதிபதி பணியிடம் கடந்த 2 வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ளது.
பல்லடம்:
பல்லடம், உரிமையியல் நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்கப்படாததால் வழக்குகள் தேக்கம என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்லடத்தில் குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இந்த நிலையில் கடந்த 2 வருடங்களாக உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளதாகவும், இதனால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:-
பல்லடம், உரிமையியல் நீதிமன்றம் நீதிபதி பணியிடம் கடந்த 2 வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து வாரம் ஒரு முறை வரும் பொறுப்பு நீதிபதி மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதில், பல்லடம் உரிமையியல் நீதிபதி பணியிடத்துக்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து இருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
உரிமையியல் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதால், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக, வழக்குதாரர்கள்,பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற வளாகம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், உரிமையியல் நீதிமன்ற நீதிபதியையும் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.