உள்ளூர் செய்திகள்
கைது

கள்ளக்காதலியை குத்தி கொன்ற வாலிபர் கைது

Published On 2022-05-04 06:56 GMT   |   Update On 2022-05-04 06:56 GMT
தேனி மாவட்டம் கூடலூரில் கள்ளக்காதலியை குத்தி கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள பாச்சலூரை சேர்ந்தவர் தேவீஸ்வரன்(30). இவருக்கும் கன்னிவாடியை சேர்ந்த லட்சுமணன் மகள் நந்தினி(26) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

நந்தினி ஏற்கனவே திருமணமாகி கணவரிடம் விவாகரத்து பெற்றவர். தேவீஸ்வரனை 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் நந்தினி தனது 2 குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார்.

அவரது தந்தை லட்சுமணன் தேனி மாவட்டம் கூடலூர் பயணியர் பங்களாவில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். அவருடன் நந்தினியும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது பக்கத்து தோட்டத்தில் வேலை பார்த்து வந்த கூலித்தொழிலாளியான முத்துச்சாமி(26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களாக முத்துச்சாமியுடன் பழகுவதை நந்தினி தவிர்த்து வந்துள்ளார்.

நேற்றிரவு நந்தினி அறைக்கு சென்ற முத்துச்சாமி உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆனால் நந்தினி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்துச்சாமி அங்கிருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினார். வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போடவே மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த லட்சுமணன் எழுந்து வந்தார்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த தனது மகளை தூக்கிக்கொண்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவருடன் முத்துச்சாமியும் உடன் சென்றுள்ளார். மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்று காலை பரிதாபமாக நந்தினி உயிரிழந்தார்.

இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். நந்தினியின் செல்போனை வாங்கி பார்த்ததில் அவர் தொடர்ந்து முத்துச்சாமியிடம்தான் அதிகநேரம் பேசி வந்தது தெரியவந்தது. இதேபோல் முத்துச்சாமியும் திருமணம் ஆகாததால் நந்தினியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக அவருடன் பழகுவதை தவிர்த்ததால் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக போலீசில் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து போலீசார் முத்துச்சாமியை கைது செய்தனர். இச்சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News