உள்ளூர் செய்திகள்
கிராமசபை கூட்டத்தில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை - கலெக்டரிடம் வாலிபர் மனு
கிராமசபை கூட்டத்தில் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் சில்லத்தூர் வாலிபர் மனு அளித்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.
அப்போது ஒரத்தநாடு தாலுகா சில்லத்தூரை சேர்ந்த சிவக்குமார் உள்ளிட்ட சிலர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டு அரசு அதிகாரிகளிடம் அரசின் நலத்திட்டம் குறித்து பேசினேன். அப்போது சிலர் என்னை கேள்வி கேட்டு பேசக்கூடாது என கூறி என்னை தாக்கி தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்தனர்.
மேலும் என் செல்போனையும் பறித்தனர். எனவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.