உள்ளூர் செய்திகள்
தக்காளி

தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-04-26 03:21 GMT   |   Update On 2022-04-26 03:21 GMT
கடும் விலை வீழ்ச்சியால் வேதனையில் இருந்த விவசாயிகள், தற்போது தக்காளிக்கு போதிய விலை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி ஏலச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தக்காளிகள் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.

திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் நாளொன்றுக்கு 100 டன்னுக்கு அதிகமான தக்காளிகள் விற்பனை நடைபெறும். இதனால் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் அதிக அளவில் தக்காளி விவசாயம் செய்து வருகின்றனர்.

உள்ளூர் தக்காளி வரத்து குறைவாக உள்ளபோது ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநில தக்காளிகளும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே மாவட்டத்தில் தக்காளியின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையாக அய்யலூர் திகழ்ந்து வருகிறது.

கடந்த மாதத்தில் அய்யலூர், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளூர் தக்காளிகள் வரத்து அதிகமாக இருந்ததால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் 14 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அய்யலூர் ஏலச்சந்தையில் தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. நேற்று 14 கிலோ எடையுள்ள பெட்டி ரூ.400 முதல் ரூ.500 வரை விலை போனது. கடும் விலை வீழ்ச்சியால் வேதனையில் இருந்த விவசாயிகள், தற்போது தக்காளிக்கு போதிய விலை கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News