உள்ளூர் செய்திகள்
மது பிரியர்களின் கூடாரமாக மாறிய நியாய விலை கடை
பரமத்திவேலூர் உழவர் சந்தை அருகே நியாய விலை கடை மது பிரியர்களின் கூடாரமாக மாறியது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் உழவர் சந்தை எதிரில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரங்களில் மது பிரியர்கள் கும்பலாக அமர்ந்து மது குடிக்கின்றனர். பின்னர் ஆபாசமான வார்த்தைகளை பேசிக்கொண்டும், சில நேரங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும் தினமும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வாங்கி வந்த மதுவை குடித்துவிட்டு மது பாட்டில்களை சாலைகளில் வீசி உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள், சாலையோரம் நடந்து செல்வர்கள் அச்சமடைந்துள்ளனர்.
குடிமகன்களின் அட்டகாசத்தால் காலையில் கடை திறக்க வரும் நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. தினமும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதால் கடைக்கு வரும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.