உள்ளூர் செய்திகள்
ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகைக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி
கும்பகோணத்தில் ஏழூர் பல்லக்கு விழாவை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகைக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் ஏழூர் பல்லக்கு விழாவை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி
தரிசனம் செய்தனர். கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏழூர் பல்லக்கு விழா நடைபெறுவது வழக்கம். இதில்
ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை மற்றும் விநாயகர் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில்
உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று மீண்டும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலை வந்தடையும் ஏழூர் பல்லக்கு ஊர்வலம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நேற்று முன்தினம் இரவு ஆதிகும்பேஸ்வரர்
கோவிலில் இருந்து, ஏழூர் பல்லக்கு ஊர்வலம் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமி மற்றும் அம்பாளுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நேற்று இரவு ஆதிகும்பேஸ்வரர் கீழ
வீதியில் நடந்தது. அப்போது கயிற்றில் கட்டப்பட்ட பொம்மை மூலம் பல்லக்கில் எழுந்தருளி இருந்த ஆதிகும்பேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை அம்மனுக்கு பூ போடப்பட்டது. இதில் கோவில் செயல்
அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.