உள்ளூர் செய்திகள்
முதியவரிடம் ரூ.26 ஆயிரம் மோசடி முயற்சி - ஒருவர் கைது
எம்.பி.யின் உதவியாளர் என கூறி முதியவரிடம் ரூ.26 ஆயிரம் மோசடி முயற்சியில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்தவர் முகமது இக்பால் (வயது 70). இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் சென்னை தண்டையார்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்த முகமது ரபிக் (52) எனக் கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து அவர் தான் எம்.பி. ஒருவரின் உதவியாளர் என்றும் ஒரத்தநாட்டில் பிளக்ஸ் பேனர் வைக்க நீங்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.26 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து முகமது இக்பால் சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் இது குறித்து விசாரித்தார். அப்போது தன்னிடம் பேசிய நபர் எம்.பி.யின் உதவியாளர் கிடையாது என்றும், தன்னிடம் பணம் பறிக்க சதி வேலையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதுகுறித்து முகமது இக்பால் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை ஆய்வு கொண்டு விசாரித்தனர். அதில் முகமது ரபிக் சென்னையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சென்னை விரைந்து சென்று முகமதுரபிக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.