உள்ளூர் செய்திகள்
செவ்வந்தி, செண்டுமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
உடுமலை அடுத்த புங்கமுத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில், விவசாயிகள், செண்டுமல்லி சாகுபடியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்தல் மட்டுமே பிரதான தொழிலாகும். பல பகுதிகளில் வாழை, கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
ஆண்டு முழுவதும் பராமரிப்பு செலவு செய்து, ஒரு வருடத்திற்கு பின்னரே இந்த பயிர்களால் வருமானம் ஈட்ட முடிகிறது.
இதனால் விவசாயிகள் அதற்கு இடைப்பட்ட காலங்களில் போதிய வருமானம் இன்றி பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் சில விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பாதியளவு வருடாந்திர பயிர் நடவு செய்தால் மீதமுள்ள நிலத்தில் விரைவில் பணம் கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.
அவ்வாறு சாகுபடி செய்ய திட்டமிடுவதில், செண்டுமல்லியும் ஒன்றாகும். தற்போது உடுமலை அடுத்த புங்கமுத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில், விவசாயிகள், செண்டுமல்லி சாகுபடியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
திண்டுக்கல், மதுரை, வத்தலகுண்டு என தென் மாவட்டங்களில் கொய்மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக, உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், சில விவசாயிகள் செவ்வந்தி, சம்பங்கி, செண்டுமல்லி போன்ற மலர்களை சாகுபடி செய்கின்றனர்.
செண்டுமல்லி விதை விதைத்தால் 20 நாட்களில், நாற்றாக வளர்ந்து விடும். நடவு செய்யப்பட்ட 60 நாட்களில் ‘பூ’ பூத்து, பலன் அளித்து விடுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.