திண்டிவனத்தில் போலீசார் விடிய, விடிய தீவிர வாகன சோதனை
திண்டிவனம்:
தமிழ் புத்தாண்டு. ஈஸ்டர் பெருநாள் என்று 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையொட்டி திருச்சி, மதுரை. விழுப்புரம், போன்ற நகரங்களிலிருந்து, அண்டை மாநிலமான புதுவை மாநிலத்தில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து பஸ், இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் மூலமாகவும் சென்னை, பெங்களூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இதையொட்டி விபத்தை குறைப்பதற்கும், மேலும் மதுபான கடத்தலை தடுக்கும் பொருட்டும் திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன், மற்றும் போலீசார் வசந்த், வேல்முருகன், அய்யனார், ஆகியோர் திண்டிவனம்- மரக்காணம் சாலை, மயிலம் சாலை, மேம்பாலம் கீழ் பகுதி, போன்ற பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி நேற்று இரவு விடிய விடிய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
வாகனங்களின் ஆவணங்களைப் பரிசோதித்த பின்னரே, வாகன ஓட்டிகளை செல்ல அனுமதித்தனர். அதிக வாகனங்கள் செல்வதால் வாகனங்களை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி, விபத்து நடக்காமலும் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், இந்த சோதனை நடைபெற்றது. மேலும் போலீசார் திண்டிவனம் முழுவதும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடக்காதவாறு வாகனங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.