களக்காடு பகுதியில் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தொடர்ந்து நாசமாக்கும் கரடிகள் கூட்டம்
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழவடகரை பூலாங்குளம் பகுதியில் சமீபகாலமாக 10-க்கும் மேற்பட்ட கரடிகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை அழித்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க விவசாயிகள் விடிய, விடிய விளைநிலங்களில் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் பூலாங்குளம் பத்தில் கரடிகள் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. நேற்று கரடிகள் மீண்டும் கீழவடகரையை சேர்ந்த விவசாயி கணேசனுக்கு (50) சொந்தமான விளை நிலங்களுக்குள் நுழைந்து 10-க்கும் மேற்பட்ட வாழைகளை சாய்த்து, வாழைக்காய்களை தின்று தீர்த்து நாசம் செய்துள்ளது.
இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். மேலும் கரடிகளிடமிருந்து வாழை உள்ளிட்ட பயிர்களை காப்பாற்ற முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதுபற்றி வனத்துறையினரிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே அச்சுறுத்தி வரும் கரடிகளை விரட்ட மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்கள் வாழ்வாதாரமே விவசாயம் தான். விவசாயத்தை தவிர எங்களுக்கு வேறு பிழைப்பு கிடையாது. 24 மணி நேரமும் விளைநிலங்களில் தான் பாடுபட்டு வருகிறோம். வங்கிகள் மற்றும் தனியார்களிடம் வட்டிக்கு கடன் பெற்றும், நகைகளை அடகு வைத்தும் விவசாயத்தில் முதலீடு செய்துள்ளோம். ஆனால் இவ்வாறு வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதால் எங்கள் வாழ்வாதாரமே பாதிப்படைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுவாக வனவிலங்குகள் நடமாட்டம் காணப்பட்டால், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவைகள் ஊருக்குள் புகாமல் இருக்க ரோந்து பணி மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது இந்த பணியை வனத்துறையினர் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.