உள்ளூர் செய்திகள்
வள்ளியூரில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
பொதுஇடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்துவது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி வள்ளியூரில் நடந்தது.
வள்ளியூர்:
வள்ளியூர் நகரில் தெருக்களிலும், பொது இடங்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்துவது சார்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணியை ரோட்டரி கிளப் ஆப் வள்ளியூர் சென்ட்ரல் மற்றும் வள்ளியூர் காவல்துறையும் இணைந்து நடத்தியது. பேரணியின் அவசியம் குறித்து தலைவர் டாக்டர் முத்து சுபாஷ் மற்றும் பட்டயத்தலைவர் தங்கதுரை ஆகியோர் உரையாற்றினர்.
பின்னர் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய் சிங் மீனா, இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், காவலர்கள், போக்குவரத்து காவலர்கள், ஏர்வாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவர் படை தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் தேசிய மாணவர் படை மாணவர்கள், வள்ளியூர் கன்கார்டியா மற்றும் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 75 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நகரில் கண்காணிப்பு காமிரா பொருத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை வள்ளியூர் சென்ட்ரல் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் செயலர் ஹரிஸ், பொருளாளர் சுதிர் கந்தன், மேக்ரோ ஐ.டி.ஐ. பொன்.தங்கதுரை ஆகியோர் செய்திருந்தனர்.