உள்ளூர் செய்திகள்
யானை, தமிழக அரசு

யானைகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த குழு- தமிழக அரசு உத்தரவு

Published On 2022-04-01 20:39 GMT   |   Update On 2022-04-01 20:39 GMT
கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் யானைகள், யானைக் குட்டிகள் இறந்த நிகழ்வுகளில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்ய வனத்துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

சென்னை:

தமிழக வனத்துறை முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர், அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் யானைகள், குறிப்பாக யானைக் குட்டிகள் இறந்த நிகழ்வுகளில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்வதற்காக, ஐ.எப்.எஸ். அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

அதன்படி, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். வேலூர் வனத்துறை செயல் திட்ட அதிகாரி சி.எச்.பத்மா, துணை வனப்பாதுகாவலர் ஜே.ஆர்.சமர்தா மற்றும் கே.காளிதாசன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள். 

இந்த குழு, யானைகள் இறந்த இடத்திற்கு நேரடியாக சென்று, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, யானை இறந்ததற்கான ஆதாரங்களை கண்டறிந்து, உண்மையை சரிபார்க்க வேண்டும்.

அதுதொடர்பாக அருகில் உள்ள மக்களுடன் உள்ளூர் கூட்டங்களை நடத்த வேண்டும். இயற்கைக்கு மாறாக நிகழும் யானை உயிரிழப்புகளை தடுக்கும் நடவடிக்கைகள், யானைகளை கண்காணிக்கும் பணிகள் ஆகியவை பற்றி புதிய நடைமுறையை வகுக்க வேண்டும். அவைதொடர்பாக செயல் திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு இந்த குழு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News