உள்ளூர் செய்திகள்
கைதி தர்மராஜ்

சிறையில் அடைக்க அழைத்து செல்லும்போது போலீசாரை கீழே தள்ளிவிட்டு கைதி தப்பி ஓட்டம்

Published On 2022-03-26 09:44 GMT   |   Update On 2022-03-26 09:44 GMT
சிறையில் அடைக்க அழைத்து செல்லும்போது போலீசாரை கீழே தள்ளிவிட்டு கைதி தப்பி ஓடிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:

திருச்சி மாவட்டம் பாலக்கரை தாராநல்லூரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 34).

இவர் மீது தஞ்சை, புதுக்கோட்டை போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி செய்தது தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் புதுக்கோட்டையில் நடந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு அங்குள்ள கிளை சிறைசாலையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் தஞ்சை போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தர்மராஜை பலத்த பாதுகாப்புடன் தஞ்சைக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் மணிமண்டபம் அருகே உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைக்க முடிவு செய்தனர்.

இதற்காக தஞ்சையில் இருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சில் செல்ல முடிவு செய்த போலீசார் கைதி தர்மராஜை கோர்ட் வெளியே உள்ள பஸ் நிறுத்தத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தர்மராஜ் பாதுகாப்புக்கு உடன் வந்த 2 போலீசாரை கீழே தள்ளிவிட்டு விட்டு ஓடினார்.

அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை விரட்டி சென்றனர். மேலும் மற்ற போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மின்னல் வேகத்தில் தர்மராஜ் தப்பி தலைமறைவாகி விட்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News