உள்ளூர் செய்திகள்
நீங்கள் மட்டுமல்ல நாங்களும் ஆட்சியில் இருக்கிறோம்- செந்தில் பாலாஜிக்கு, அண்ணாமலை பதில்
தம் மீதான நடவடிக்கைக்கு காத்துக் கொண்டிருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மதுரை:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
ஒரு தனியார் நிறுவனத்துக்கு மின் திட்டம் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது என்பதை தெரிவித்திருந்தேன். இதற்கு தமிழக மின்துறை அமைச்சர் தரப்பில் ஏராளமான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அந்த நிறுவனத்தின் ஊழியர் போல பேசுகிறார். அந்த நிறுவனம் ஏற்கனவே திவாலான நிறுவனம். இதுபோன்ற சூழலில் மிகப்பெரிய திட்டத்தை எப்படி வழங்க முடியும்? என்பது புரியாத கேள்வியாக உள்ளது.
மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை பாஜக அனுமதிக்காது.செந்தில் பாலாஜி ஊழல்வாதிதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பே கூறி இருக்கிறார்.
ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மின்வெட்டு இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
ஊழலை தட்டிக்கேட்பதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்காக காத்திருக்கிறேன்.
என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தாலும், போலீசை வைத்து கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும், சிறையில் இருந்து வந்து மீண்டும் தி.மு.க. அரசின் ஊழலைப்பற்றி பேசுவேன்.
அதேவேளையில் நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் ஆட்சியில் இருக்கிறோம் என்பதை அமைச்சருக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழலில் ஈடுபடுவது எந்த கட்சியாக இருந்தாலும் ஏற்க முடியாது. ஊழலை வெளிக்கொண்டு வருவது பாஜகவின் கடமை. இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.