உள்ளூர் செய்திகள்
வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும் - மாணவர்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தல்
மலம், சிறுநீர் தினந்தோறும் சரிவர கழிக்க வேண்டும். இல்லையேல் நோய் வாய்ப்பு அதிகம். சோப்பிற்கு பதில், கடலை மாவை பயன்படுத்தலாம்.
திருப்பூர்:
காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மக்களை தேடி மருத்துவம் சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடந்தது. சிறப்பு விருந்தினராக நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவர் இளங்கோவன் பங்கேற்றார். முகாமிற்கு முதல்வர் நசீம்ஜான் தலைமை வகித்தார்.
இதில் டாக்டர் இளங்கோவன் பேசியதாவது:
வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் அவசியம். ஆண்கள் வாரத்துக்கு ஒரு முறையாவது முகச்சவரம் செய்ய வேண்டும். இதன் மூலம் எவ்வித சருமம் சார்ந்த நோய்கள் ஏற்படாது. குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். காலை 5 மணிக்கு எழுவதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மலம், சிறுநீர் தினந்தோறும் சரிவர கழிக்க வேண்டும். இல்லையேல் நோய் வாய்ப்பு அதிகம். சோப்பிற்கு பதில், கடலை மாவை பயன்படுத்தலாம். இறுக்கமான ஆடைகள் உடுத்தக்கூடாது. எளிமையான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதிகமான கொழுப்பு உணவுகளை எடுத்து கொள்ளக்கூடாது. இரவில் மோர், தயிர் குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. பெண்களுக்கான உடல் ரீதியான அனைத்து நோய்களுக்கும் ஆரம்ப சுகாதார சித்த மையங்களில் மருந்து கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.