உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த டிரைவர் கைது
திருப்பூரில் பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூரில் பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவி கடந்த 3-ந்தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து மாணவியின் தந்தை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த மாணவி பக்கத்து தெருவில் வசிக்கும் டிரைவரான முத்துலிங்கம் (வயது 22) என்பவருடன் வெளியூர் சென்றது தெரியவந்தது. மேலும் முத்துலிங்கம் மாணவியுடன் பெங்களூருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டதுடன், முத்துலிங்கத்தை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் முத்துலிங்கம் மாணவியை காதலித்து வந்ததும், சம்பவத்தன்று மாணவியை பெங்களூருவுக்கு கடத்தி சென்று திருமணம் செய்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் முத்துலிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.