உள்ளூர் செய்திகள்
நெல்லையில் வீடு,வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
நெல்லை மாவட்டத்தில் தடுப்பூசி முகாமையொட்டி இன்று ஏராளமான இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்திலும் தடுப்பூசி முகாமையொட்டி இன்று ஏராளமான இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நெல்லை மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என சுமார் 500--க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதுதவிர வீடு, வீடாக சென்றும் தடுப்பூசி போடப்பட்டது. கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு சென்று முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
இரண்டு தவணை முடிந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத் தைப் பொறுத்தவரை சுமார் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2--வது தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் விரைவு படுத்தி வருகிறது.
மாநகரப் பகுதியை பொறுத்தவரை பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் உத்தரவின்படி மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின்படி 4 மண்டலங்களிலும் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டது.
உதவி ஆணையாளர் லெனின் அறிவுறுத்தலின் படியும் தச்சை மண்டலத்தில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மண்டலத்திற்கு உட்பட்ட கம்பராமாயணம் தெரு, மணிமேகலை தெரு, குண்டலகேசி தெரு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போடப்பட்டது.
நெல்லை மாநகர பகுதியில் மொத்தம் 74 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மாநகராட்சி பணியாளர்கள் குழுக்களாக சென்று கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.