உள்ளூர் செய்திகள்
பூஸ்டர் தடுப்பூசி ஆர்வம் காட்டாத பொதுமக்கள்
பிப்ரவரி 2-வது வாரம் வரை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடப்பது குறித்த விபரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி 20-ந்தேதி முதல் வியாழன்தோறும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் தகுதியானவர்களாக இருந்த போதிலும் இதுவரை 10 ஆயிரம் பேர் கூட தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை.
பிப்ரவரி 2-வது வாரம் வரை பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடப்பது குறித்த விபரங்கள் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது. இதனால் பொதுமக்கள் பயன்பெற்றனர். தேர்தல் நடந்த வாரம் , ஓட்டு எண்ணிக்கை நடந்த வாரத்தில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் சுகாதாரத்துறையால் நடத்தப்பட்டது.
ஆனால் முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்தால் எந்த அறிவிப்பும் மக்களுக்கு வெளியிடப்படவில்லை. இதனால் பலருக்கும் வியாழக்கிழமை நடக்கும் முகாம் குறித்து தெரியவில்லை. தடுப்பூசி செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
கடந்த வியாழக்கிழமை நடந்த முகாமில் 55 பேர் மட்டுமே பங்கேற்றனர். வரும் வாரங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை முன்கூட்டியே வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.