உள்ளூர் செய்திகள்
பலியான தங்கராஜ்

வள்ளியூர் அருகே வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-02-25 10:28 GMT   |   Update On 2022-02-25 10:28 GMT
வள்ளியூர் அருகே உள்ள வடலிவிளையை சேர்ந்த தங்கராஜ் வாகனம் மோதிய விபத்தில் பலியானார்.
பணகுடி:

வள்ளியூர் அருகே உள்ள வடலிவிளையை சேர்ந்த சன்னியாசி முத்து மகன் தங்கராஜ் (வயது 26). இவருக்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில் வள்ளியூர் அருகே உள்ள ஒத்தக்கடையில் மனைவியுடன் குடியிருந்து வந்தார்.

இவர் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டிக்கொடுக்கும் தொழில் செய்து வந்தார். மேலும் தங்கராஜ் வடலிவிளையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து 129 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கி இளவட்டக்கல் வீரர் எனும் பெயரும் வாங்கியுள்ளார்.

  இந்த ஆண்டும் அதே 129 கிலோ எடையுள்ள இளவட்டக் கல்லை தூக்கி வெற்றி பெற்றுள்ளார்.  இவர் நேற்று வடலிவிளையில் நடைபெற்ற நண்பரின் திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது வள்ளியூர் நம்பியான்விளை அருகே அடையாளம் தெரியாத  வாகனம் இவரது மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.  

அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு காரில் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் தங்கராஜ் இறந்துள்ளார்.

விபத்து குறித்து வள்ளியூர் சப்- இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்.

 இளவட்ட கல் வீரர் விபத்தில் இறந்த சம்பவம் வடலிவிளை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News