உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்: புதிய தொற்று 788, ஒருவர் உயிரிழப்பு
சென்னையில் நேற்று 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 788 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 949 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 45 ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று 223 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 115 பேருக்கும், செங்கல்பட்டில் 86 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் புதிய பாதிப்பு பதிவாகி உள்ளது.
இன்று ஒரே நாளில் 2,692 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33 லட்சத்து 93 ஆயிரத்து 703 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,981 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,033 ஆக குறைந்துள்ளது.