உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தின் 35-வது கட்ட விசாரணை நிறைவு
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த 35-வது கட்ட ஒரு நபர் ஆணைய விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே 34 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டு 1037 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஒருநபர் ஆணையத்தின் 35-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் கடந்த 25-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதில் நெல்லை முன்னாள் சரக டி.ஐ.ஜி.யும், சென்னை போக்குவரத்துபிரிவு ஐ.ஜி.யுமான கபில்குமார் சரத்கர், சென்னை காவலர்நலன் ஏ.டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ், முன்னாள் தூத்துக்குடி எஸ்.பி.யும், தற்போதைய சென்னை துணை போலீஸ் கமிஷனருமான மகேந்திரன், முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது இன்று ஆஜராகினார்.
கடந்த 5 நாட்களாக நடந்து வந்த 35-வது கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது.