உள்ளூர் செய்திகள்
கொள்ளை

திண்டிவனத்தில் கடையின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் கொள்ளை

Published On 2022-01-26 11:07 GMT   |   Update On 2022-01-26 11:07 GMT
திண்டிவனத்தில் கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ‌அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம்:

விழுப்புரம் அருகே உள்ள திண்டிவனம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உமாபதி தெரு நல்லி கொண்டான் நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). இவர் திண்டிவனத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். மேலும் ஆவின்பால் டீலராகவும் உள்ளார்.

நேற்றிரவு பாலாஜி வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து இன்று அதிகாலை பாலாஜி கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் வைத்திருந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. மேலும் இந்த மர்ம நபர்கள் கடையில் வைத்திருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட்டிஸ்க்குகளை திருடி சென்றதும் தெரியவந்தது.

கடையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த கடையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுனர் மற்றும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

இந்த நாய் கொள்ளை நடந்த கடையில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ‌அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News