உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி பயிற்சி
மதுக்கூர் அருகே விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி பயிற்சி நடந்தது.
மதுக்கூர்:
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே உலையகுன்னம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான நெல் வயல் வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் இக்கிராமத்தை சேர்ந்த 30 விவசாயிகளை தேர்வு செய்து நெல் விதை முதல் அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்களும் களத்தில் நேரடியாக பயிற்சி அளிக்கப்பட்டது.
6 வகுப்புகளாக நடத்தப்படும் இப்பயிற்சியில் மூத்த வேளாண் வல்லுநர் மண் வளம், காலத்தில் நெல் விதையை விதைப்பதன் முக்கியத்துவம், நாற்றங்கால் தொழில்நுட்பம்,
களை நிர்வாகம் பற்றியும் விவசாயிகளுடன் கலந்துரையாடி குழுக்களாக பிரித்து தெளிவாக எடுத்துரைத்தார்.
மேலும் பவர்பாயிண்ட் மூலமாக நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்தி ,பொறிவண்டு, நீர் தாண்டி, தட்டான் நீர் மிதப்போன், குளவி போன்றவைகள் எவ்வாறு தீமை செய்யும் பூச்சிகளை உண்டு விவசாயிகளுக்கு நன்மை செய்கின்றன என்பதை மிகத் தெளிவாக காணொளிக் காட்சியாக விளக்கியது.
மதுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வித்யாசாகர் இயற்கை உரங்கள் தயாரிப்பது, மீன் அமினோ அமிலம், ஜீவாமிர்தம், டீகம்போஸர் உபயோகம் போன்றவைகள் பற்றி விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்து எப்போது, எவ்வளவு எப்படி பயன்படுத்துவது என்பது வரை எடுத்து கூறினார்.
இதனையடுத்து வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, வேளாண்
உதவி அலுவலர்கள் ஜெரால்டு சுரேஷ் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள்
ஐயா மணி, ராஜூ ஆகியோர் மூத்த வேளாண் வல்லுனரின் வழிகாட்டுதலோடு விவசாயிகளுடன் வயலில் இறங்கி நன்மை செய்யும்
தீமை செய்யும் பூச்சிகளை நேரடியாக தெரிந்து கொள்ள உதவியதோடு பொறி வண்டு சிலந்தி ஆகியவற்றின் செயல்பாடுகளையும் விவசாயிகள் கண்டு தெளிவு பெற்றனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஒலயகுன்னம் முன்னோடி விவசாயி அழகிரி செய்திருந்தார்.
இதன்படி நெல் வயல்வெளி பயிற்சி விவசாயிகள் பயன்பெறும் வகையில் பத்து கிராமங்களுக்கும் நெல் வயல் வெளிப்பள்ளி பயிற்சி நடத்தப்பட்டு முடிக்கப்பட்டது.