உள்ளூர் செய்திகள்
மதுரையில் 1053 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்
மதுரையில் ஆயிரத்து 53 இடங்களில் பரவலாக தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே நோய்த்தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில் ‘கோவேக்சின்’, ‘கோவிசில்டு’ ஆகிய 2 தடுப்பூசிகளை பொதுமக்கள் அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதற்காக மாவட்டம் முழுவதிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் 19-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று காலை தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் 1053 பகுதிகளில் 19-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்து வருகிறது. இன்று காலை 11 மணி நேர நிலவரப்படி 17,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர்.
மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை 33 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதில் 83 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 52 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது என்றார்.