உள்ளூர் செய்திகள்
குடியரசு தினவிழாவிற்காக பாளை ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
குடியரசு தினவிழாவுக்காக பாளை ஆயுதப்படை மைதானத்தில் இன்று போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பாக பாளை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெறும்.
தற்போது வ.உ.சி மைதானத்தில் புதிய அரங்கம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 26-ந்தேதி குடியரசு தின விழாவை பாளை ஆயுதப்படை மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாளை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முதல் குடியரசு தின விழாவுக்காக ஒத்திகை நடைபெற்று வருகிறது.
இதில் போலீஸ்காரர்கள், தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு குடியரசு தினவிழா அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு குடியரசு தினவிழாவுக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டத்திலும் குடியரசு தின விழாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
தற்போது கொரோனா தொற்று பரவலும் அதிகரித் துள்ளதால், குடியரசு தின விழாவை பார்க்க பார்வையாளர்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் ஆயுதப்படை மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி மையம் உள்பட முக்கிய பகுதிகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.