உள்ளூர் செய்திகள்
கைது

மனைவியுடன் தகராறில் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்த தந்தை கைது

Published On 2022-01-22 08:30 GMT   |   Update On 2022-01-22 08:30 GMT
ஏரல் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள இடையர் காடு சம்படி காலனியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது42), கூலித்தொழிலாளி.

இவருக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவியும், 11, 9, 6 வயதில் 3 மகன்களும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் அய்யப்பனிடம் கோபித்துக்கொண்டு அவரது மனைவி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் 3 மகன்களுக்கும் வி‌ஷத்தை கொடுக்க முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்த ஹேர்டையை தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்தார். அப்போது அங்கு வந்த அவரது மனைவி ரேகா இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சலிட்டார்.

இதைத்தொடர்ந்து அய்யப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 குழந்தைகளையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ஏரல் போலீஸ் நிலையத்தில் ரேகா புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இன்று காலை அய்யப்பனை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




Tags:    

Similar News