உள்ளூர் செய்திகள்
திருப்பரங்குன்றம் அருகே திரியும் புள்ளிமான்கள்
திருப்பரங்குன்றம் அருகே புள்ளிமான்கள் திரிந்து வருகின்றன.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தை அடுத்த ஜெ.ஜெ.நகர் பகுதியில் 100-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு இரு பகுதிகளிலும் பானங்குளம் கண்மாய் மற்றும் நிலையூர் கண்மாய் உள்ளது.
இந்த கண்மாய் பகுதியில் அதிகளவு புள்ளிமான்கள் வசிக்கின்றன. தொடர் மழை காரணமாக 2 கண்மாய்களும் நிரம்பியுள்ள நிலையில் அங்கிருந்து 3 மான்கள் ஜெ.ஜெ.நகர்பகுதிகளுக்குள் இன்று காலை வந்தன. பொதுமக்களை கண்டவுடன் அவை துள்ளி குதித்து ஓடிவிட்டன.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் மான்கள் நகருக்குள் செல்லாதவாறு வனப்பகுதிக்குள் துரத்தி விட்டனர்.
இது குறித்து இந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ஜெ.ஜெ.நகரை சுற்றி கண்மாய் பகுதிகள் மற்றும் ரெயில்வேக்கு சொந்தமான பகுதிகளில் அடர்ந்த வனம் போல மரங்கள் சூழ்ந்துள்ளது.இங்கு அதிக அளவில் மான்கள் வசிக்கின்றன. கண்மாய்கள் நிரம்பியுள்ளதால் மான்கள் வழிதவறி ஊருக்குள் வந்து விட்டன. அவற்றை மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டி விட்டோம்.
இந்த பகுதியில் அதிக அளவு நாய்கள் இருப்பதால் அவைகளால் மான்களுக்கு ஆபத்து அதிகம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்தப்பகுதியில் உள்ள நாய்களை பிடித்து வேறு இடங்களில் கொண்டு விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்தப்பகுதியில் உள்ள மான்களைப் பாதுகாக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.