உள்ளூர் செய்திகள்
செல்போன் டவரில் ஏறி வாலிபர் போராட்டம்
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரில் பியூலா நான்சி என்ற பெண்ணை அருளரசன் திருமணம் செய்து கொண்டார்.
பல்லடம்:
பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள ராயர்பாளையம் பகுதியில் சுமார் 100 அடி உயரமுள்ள பி.எஸ்.என்.எல். நிறுவன செல்போன் கோபுரம் அமைந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று செல்போன் கோபுரத்தின் மீது வாலிபர் ஒருவர் ஏறி நின்று கொண்டு மனைவியை மீட்டுத் தர வேண்டும். இல்லாவிட்டால் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சத்தம் போட்டுக் கொண்டு இருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியே சென்றவர்கள் இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடம் விரைந்து சென்ற பல்லடம் போலீசார் டவரின் மீது ஏறி நின்று கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த அந்த வாலிபரிடம் பேச்சு கொடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி லாகவமாக அவரை கீழே இறங்கி வரவழைத்தனர்.
பின்னர் அந்த வாலிபரை பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அந்த வாலிபர் ஈரோடு பகுதியை சேர்ந்த அருளரசன்(வயது 28) என்பது தெரியவந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகரில் பியூலா நான்சி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் , உறவினர்கள் மனைவியை கடத்திச் சென்று அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும் கூறினார்.
ஈரோடு, கோவை போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக தெரிவித்த அவர், உடனடியாக தனது மனைவியை மீட்டு தன்னுடன் சேர்த்து வைக்க கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.