உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியது -சென்னையில் மட்டும் 7520
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 28,561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,54,912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 28,561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றைய பாதிப்பு 26981 ஆக இருந்த நிலையில் இன்று 28 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பு விகிதம் 18.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
சென்னை தொடர்ந்து புதிய தொற்று அதிக அளவில் பதிவாகிறது. சென்னையில் இன்று ஒரே நாளில் 7520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 2196 பேருக்கும், கோவையில் 3390 பேருக்கும், திருவள்ளூரில் 998 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 738 பேருக்கும், கன்னியாகுமரியில் 1148 பேருக்கும், மதுரையில் 718 பேருக்கும், திருப்பூரில் 897 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 19,978 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 26 ஆயிரத்து 479 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,112 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,79,205 ஆக உயர்ந்துள்ளது.