உள்ளூர் செய்திகள்
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன அதிகாரி உயிரிழப்பு
முனிராஜ் தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்றிரவு குடும்பத்துடன் தஞ்சைக்கு புறப்பட்டார்.
காங்கேயம்:
கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 39). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி (34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
முனிராஜ் தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்றிரவு குடும்பத்துடன் தஞ்சைக்கு புறப்பட்டார். கோவையில் இருந்து தஞ்சைக்கு புறப்பட்ட அரசு பஸ்சில் அவர் பயணித்தார்.
புகையிலை பயன்படுத்தும் பழக்கத்திற்கு ஆளான முனிராஜ் பஸ்சில் ஏறும் போது புகையிலையை வாயில் போட்டு மென்றுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-அவினாசிபாளையம் இடையே காடையூர் பிரிவு சாலையில் பஸ் செல்லும் போது, எச்சில் துப்புவதற்காக பஸ்சின் முன்பக்க வாசல் கதவை திறந்து எச்சில் துப்ப முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஓடும் பஸ்சில் இருந்து தவறி முனிராஜ் கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். உடனே அவரை மற்ற பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே முனிராஜ் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து டிரைவர்-கண்டக்டரிடம் காங்கேயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரணை நடத்தி வருகிறார்.