உள்ளூர் செய்திகள்
தீ விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதமாகின.

தீ விபத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள் நாசம்

Published On 2022-01-19 10:09 GMT   |   Update On 2022-01-19 10:09 GMT
தஞ்சை ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது.
தஞ்சாவூர்:

தஞ்சையை சேர்ந்தவர் முரளிதரன். இவர் தஞ்சை தொல்காப்பியர் 
சதுக்கம் அருகே நாகை ரோட்டில் மோட்டார்சைக்கிள் ஷோரூம் வைத்துள்ளார். 

இங்கு புதிய மோட்டார் சைக்கிள் விற்பனை மற்றும் பழுதடைந்த 
மோட்டார் சைக்கிள் சர்வீஸ் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து ஷோரூமை 
பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது திடீரென ஷோரூமிலிருந்து 
புகை கிளம்பியது. 

சிறிது நேரத்தில் ஷோரூம் பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளவென 
பரவி மோட்டார் சைக்கிள் மற்றும் உதிரிப் பாகங்கள் எரிந்து கொண்டிருந்தன. 

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

அதன்பேரில் மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா உத்தரவின் பேரில் 
உதவி மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் நிலைய அலுவலர் 
திலகர் மற்றும் செல்வம் உள்ளிட்ட வீரர்கள் விரைந்து சென்று 
தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை போராடி அணைத்து கட்டுக்குள் 
கொண்டு வந்தனர்.

இருப்பினும் பழுது பார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. 7 புதிய மோட்டார் 
சைக்கிள்கள் லேசான அளவில் சேதம் அடைந்தது. மேலும் 
உதிரிப் பாகங்கள் எரிந்து சேதம் அடைந்தது. 

தீப்பிடித்து எரிந்து சேதமான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 
உதிரி பாகங்களின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை.

இதுகுறித்து தஞ்சை கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். 
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து 
நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இருப்பினும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி 
வருகின்றனர்.  இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை 
ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News