உள்ளூர் செய்திகள்
சிவன்மலை கோவில் தேரோட்டம் ரத்து - விஷ்வ ஹிந்து பரிஷத் நாளை ஆர்ப்பாட்டம்
பந்தல் கால் நட்டி திருவிழா துவங்கிய பின் தேரோட்டம் நடக்காவிட்டால் ஆகம விதிகளுக்குப் புறம்பானது.
காங்கயம்:
காங்கயம் அடுத்த சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற ஸ்தலம். ஆண்டு தோறும் தைப்பூசத் தேர்த்திருவிழா 3 நாள் சிறப்பாக நடைபெறும். பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரம் பேர் வந்து செல்வர். இந்தாண்டு 18 முதல் 20 வரை 3 நாள் தேர்த்திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணியும் தொடங்கியது.
இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை எனக் கூறி திருவிழா ரத்து செய்யப்படுவதாக, அறநிலையத்துறை அறிவித்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தேர்த்திருவிழா நிகழ்வுக்கு பந்தல்கால் நட்டி திருவிழா துவங்கிய பின் தேரோட்டம் நடக்காவிட்டால் ஆகம விதிகளுக்குப் புறம்பானது. ஒரு நாள் திருவிழாவாவது நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காங்கயம் கோட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி கார்த்திக் ராஜா வெளியிட்ட அறிக்கையில்:
ஆகம விதிகளுக்குப் புறம்பாக கோவில் விழாவை ரத்து செய்யும் நடவடிக்கை, மூலவரை மறைத்து வசூல் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள உண்டியல் ஆகியவற்றை கண்டித்தும், தேர்த்திருவிழாவை நடத்த வலியுறுத்தியும்நாளை 19-ந்தேதி கோவில் அலுவலகம் முன் முற்றுகை மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். வி.ஹெச்.பி., அமைப்பினர், பொதுமக்கள் இதில் கலந்து கொள்வர் என்று தெரிவித்துள்ளார்.