உள்ளூர் செய்திகள்
வடமாநில தொழிலாளியை கத்தியால் வெட்டிய கும்பல்- 4 பேர் கைது
வடமாநில தொழிலாளியை கத்தியால் வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த கிளாம்பாக்கம் தண்டலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி மர சம்பந்தப்பட்ட பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் நேற்று திருவள்ளூர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 4-க்கும் மேற்பட்டவர்கள், வடமாநில தொழிலாளர்களை பார்த்து, உங்களால்தான் தமிழக மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனக்கூறி வடமாநில தொழிலாளியான அமித்குமாரை கத்தியால் வெட்டினர். இதில் காயம் அடைந்த அவர், திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் (வயது 19), வேலு (19), மஜித் (28) உள்பட 4 பேரை கைது செய்தனர்.