உள்ளூர் செய்திகள்
இரவு நேர பாதயாத்திரை - பக்தர்கள் தவிர்க்க வேண்டுகோள்
பழநி மலை கோவிலுக்கு, பாதயாத்திரையாக பல்லடம் வழியாக ஏராளமான பக்தர்கள செல்கின்றனர்
பல்லடம்;
உலகப் புகழ்பெற்ற முருகன் திருத்தலமான பழநி மலைக்கு தைப்பூச விழாவுக்கும் பங்குனி உத்திரத்திற்கும் பாதயாத்திரையாக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். திருப்பூர்,கோவை மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பல்லடம் வழியாக செல்கின்றனர்.
இவர்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடந்து செல்கின்றனர். இந்த நிலையில் பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பாத யாத்திரையாக பயணம் மேற்கொள்கின்றனர்.
இதற்கிடையே போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தவிர்க்க இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் .
இதுகுறித்து பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு கூறியதாவது :
பழநி மலை கோவிலுக்கு, பாதயாத்திரையாக பல்லடம் வழியாக ஏராளமான பக்தர்கள செல்கின்றனர். பகலில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக இரவு நேரங்களில் பாத யாத்திரை பயணம் மேற்கொள்கின்றனர்.
பருவ நிலை மாற்றத்தில் இரவில்அதிகளவில் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால், ரோடுகளும், வாகனங்களும் எளிதில் தெரிவதில்லை. சில இடங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதயாத்திரை பக்தர்கள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது .
எனவே இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாமல் இரவில் சென்றால் “ரிப்ளக்டர்” ஸ்டிக்கர்’ கொண்ட மேலாடை, தொப்பி, தோள்பை அணிந்து சென்றால் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கையாக இருப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.