உள்ளூர் செய்திகள்
விசைத்தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நாகராஜ் கடந்த சில மாதங்களாக அதிக மதுப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி தமிழ்நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் நாகராஜ் (வயது 37). இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், சக்திவேல் என்ற மகனும் ஜீவிதா என்ற மகளும் உள்ளனர்.
இவர் விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அதிக மதுப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தார் குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.
இந்தநிலையில் குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட தனது நிலையை எண்ணி வருந்திய நாகராஜ் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறி மாட்டும் கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .
வெளியே சென்றுவிட்டு வந்த அவரது மனைவி இதனை பார்த்து உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.