உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் வீட்டில் ரூ.1 லட்சம் நகை-பணம் கொள்ளை
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் மர்மநபர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை செல்வன் சிட்டி நகரை சேர்ந்தவர் பாலசந்திரன்(வயது 67).
இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றார்.
நேற்று இரவு அனைவரும் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.
அங்குள்ள அறையில் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் பணம், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை அறிந்த பாலசந்திரன், புதுக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.